Friday, 1 June 2012


குஞ்சுப்பிள்ளையும்
குட்டிப்பூனையும்

என்னிடம் குஞ்சுப்பிள்ளை அடிக்கடி வருவாள்.

’’மாமா எனக்கு முட்டாய் மருந்து கொடு’’

பிள்ளைகள் தனக்கு எது வேண்டுமோ அதைக்கேட்க எப்போதும் தயங்கியதில்லை.

’’ உனக்கு என்ன பண்ணுது குஞ்சுபிள்ள’’

’’ தலவலி,  காச்சலு, பல்லுவலி, காலுவலி  ’’

எல்லாநோய்களும் தனக்கு இருப்பதாய் சொல்வாள். ஒரு கள்ளச்சிரிப்பு முகம் எங்கும் விரவிக்கிடக்கும்.

இவளுக்கு கொஞ்சம் ’’ இனிப்பு ’’வேண்டும். அதுவும் இலவசமாய் கிடைக்கும் போது ஒரு பொய் சொன்னால் பரவாயில்லை. பிள்ளைகள் பெரியவர்களிடம் இருந்து முதலில் பொய் சொல்ல கற்றுக்கொள்கிறார்கள்.

நான் கொஞ்சம் சிறப்பு மருந்தை கொடுத்து அனுப்புவேன். பதுமை மாதிரி திரும்புவாள்.

ஒரு நாள் ஒரு குட்டிப்பூனையோடு வந்தாள்


பூனை இளைத்துப்போயிருந்தது, கண்கள் உள்ளடங்கி, வயிறு சுண்டி முடிகள் அங்காங்கே பெயர்ந்து திட்டுதிட்டாய் இருந்தது.

பூனையைப்பற்றிய கவலை பிள்ளையின் முகம் எங்கும் படர்ந்திருந்தது. முகத்தில் களையில்லை

’’என்னாச்சு பாப்பா ’’

’’ எனக்கு மருந்து வேண்டாம் இந்த பூனையை பாருங்க ’’

’’ பூனைக்கு என்ன பன்னுது குட்டி ’’

’’சாப்பிடுல ’’

’’சரி’’

’’ சும்மா படுத்துகிட்சு ’’

’’சரி’’

இதிலிருந்து வேறு எந்தமுடிவுக்கு போவது ? எனக்கு இன்னும் தகவல்  தேவையாய் இருந்தது.

’’அப்புறம் என்ன நடந்தது சொல்லு குஞ்சு ’’

’’ ம்ம் அப்புறம் ’’

’’’ தம்பி பூனை அண்ணா பூனை ரண்டும் சண்டை சண்டை போட்டுச்சு ’’

’’ஒகோ ’’

’’அதிலிருந்து இப்பிடியாயிடுச்சு’’

என்ன செய்வது பெண்ணே! நம் நாட்டில் எல்லா தம்பிகளும் பொறுப்பில்லாத தறுதலையாக வந்து வாய்த்திருக்கிறார்கள்.

இந்த முட்டாள் அண்ணன்கள் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறார்கள்.

குஞ்சுபிள்ளையையும் குட்டிப்பூனையையும் ஒரு சேர குணப்படுத்த வேண்டி இருக்கிறது.

நான் nat-mur 200  கொடுத்து அனுப்பினேன்.

பத்து நாள் சென்று பரிட்சைகளெலலாம் கழித்து வந்தாள். முகம் பூரித்து இருந்தது . நான் பூனையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. முகம் குறிப்பதை விடவா, வாய் சொல்ல வேண்டும்.!!

பிறகு அடிக்கடி என்னை பார்க்க வருவாள். முட்டாய் மருந்து வாங்க மட்டுமல்ல.

நான் துயரர்களுக்கு  மருந்து மடித்து கொடுக்கும் போது என்னையும் முந்திக்கொண்டு சொல்வாள்-

’’ நல்லா சப்பி சாப்பிடுங்க’

துயரர் முகத்தில் வெட்கமும் சிரிப்பும் கலந்திருக்கும்.

ஒரு உப்பு மருந்து எனக்கு ஒரு நல்ல தோழியை கொடுத்திருக்கிறது.- அவளுக்கு நானும்; அவள் எனக்கும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.





[பிப்ரவரி 2002 ல் ஹோமியோ நண்பன் இதழில் நான் எழுதிய கட்டுரையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ]

No comments:

Post a Comment